திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்),
அது தொடர்பான எல்லாவற்றையும் காணவேண்டுமானால், ஒற்றை பதிவில் அது இயலாது. அதனால் இது வழக்கத்தை விட மிக பெரிய பதிவு என்பதால் படிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கவேண்டும் என்பதாலும், எனக்கு ஒரே நாளில் அத்தனை பகுதிகளை எழுத கால அவகாசம் இல்லை என்பதாலும், இந்த தொடர் ஐந்து பகுதிகளா்க வெளிவரும்.
திருப்பதி கோயிலின் உண்மையான மூல வரலாற்றை அறிய வேண்டும் என்றால், நாம் கீழே கண்ட எல்லா சான்றுகளையும் ஆராய வேண்டும், அவை:
- புராண இதிகாச சான்றுகள்
- இலக்கிய சான்றுகள்
- வரலாற்று சான்றுகள்
- புத்த மத சான்றுகள்
- வெளிநாட்டு வரலாற்று சான்றுகள்
- கோயிலின் வடிவமைப்பு முறையில் கிடைக்கும் சான்றுகள்
- கோயிலில் கடைபிடிக்கப் படும் பழக்க வழக்கங்களில் கிடைக்கும் சான்றுகள்
இந்த சான்றுகளில் மூலம் நம்மால் என்ன அறிய முடிகிறது என்று பார்ப்போம்
புராண இதிகாசங்கள்:
புராண இதிகாசங்களில் பல கதைகள் சொல்லப்பட்டாலும், பொதுவாக ஏற்று கொள்ளப்பட்ட வடிவமானது, பிருகு முனிவர், மும்முர்த்திகளில் யார் சிறந்தவர் என கண்டறிய முதலில் சத்யலோகம் செல்கிறார், பின் கைலாசம் செல்கிறார், இரண்டு இடங்களிலும், அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல், பிரம்மாவை உனக்கு பூலோகத்தில் வழிபடும் கோயிலே இல்லாமல் போகட்டும் என்றும், சிவனை உனக்கு உருவ வழிபாடே இல்லாமல் போகட்டும்(லிங்க வழிபாடு மட்டுமே உண்டு) என்று சாபம் கொடுத்துவிட்டு, வைகுண்டம் செல்கிறார், அங்கும் சரியான வரவேற்பு இல்லை என்ற கோபத்தில், நாராயணனை நெஞ்சில் எட்டி உதைக்கிறார் முனிவர்.
நாராயணன், என்னை உதைத்ததால் உங்கள் கால் வலிக்குமே என்று கூறி, முனிவரின் பாதத்தை தடவி கொடுப்பது போல தடவி அவரது உள்ளங்காலில் இருந்த ஞானகண்ணை நீக்கி விடுகிறார். அதோடு பிருகு முனிவரின் ஆணவம் அழிந்தது.
ஆனால், அவர் நெஞ்சில் குடியிருந்த லட்சுமி, நான் இருக்கும் இடத்தை ஒருவன் எட்டி உதைக்கிறான், நீ பார்த்துகொண்டு சும்மா இருந்தது தவறு என்று சொல்லி நாரயணனை விட்டு பிரிந்து செல்கிறாள், லட்சுமி பிரிந்ததால் நாராயணன் ஏழை ஆகி, பூமி முழவதும் அவளை தேடி களைப்படைந்து, வேங்கடமலையில் உள்ள புஷ்கரணி ஏரியின் கரையில், ஒரு பெரிய கரையான் புற்றுக்கு அடியில் வாசம் செய்கிறான்(அது தான் ஸ்ரீனி-வாசன்). அங்கே ஆண்டு வரும் சோழ மன்னனின் பசுக்களில் ஒன்று தினமும் அந்த புற்றில் பாலை சொரிந்து ஸ்ரீனிவாசனின் பசியை போக்கி வந்தது.
ஒரு பசு மட்டும் தினமும் பால் தாராததை கண்ட சோழ மன்னன் (மன்னனுக்கு ஒவ்வொரு பசுவையும் கண்காணிப்பது தான் வேலை போல). மறுநாள், பசுவை பின்தொடர்ந்து வந்தான், பசு புற்றில் பால் சொரிவதை கண்டான், மன்னன் ஓரு கோடலியை கொண்டு புற்றில் அடிக்க, இரத்தம் பீறிட்டது. பசுவும் கன்றுமாக வந்த சிவனும் பிரம்மாவும் (நடுவுல இப்படி திடீர் திருப்பங்களை பற்றி கேள்வி கேட்காமல் கதை கேட்க வேண்டும்) கோபம் கொண்டு சோழ மன்னனை ஒரு பிரம்மராட்சதனாகும் படி சபித்தனர். சோழ மன்னன் சாப விமோசனம் கேட்க, அதற்கு ஸ்ரீநிவாசன் அடுத்த ஜென்மத்தில் நீ ஆகாச ராஜனாக பிறப்பாய் அப்போது உன்மகள் பத்மாவதியை எனக்கு திருமணம் செய்து கொடுத்து உன் தங்க கிரீடத்தை என் தலையில் வைத்தால் உன் சாபம் போகும் என்றார். அந்த புற்றிலே சுமார் ஆயிரம் வருடங்கள் ஸ்ரீநிவாசன் வாழ்ந்து வந்தார். அந்த ஆயிரம் வருடமும் வேறு எந்த பசுவாவது வந்து பால் கொடுத்ததா என்றும் தெரியாது
போன ஜென்மத்தில் எசோதை கிருஷ்ணனை பாதியில் பிரிந்ததால், இப்போது வேங்கட மலையில் வாகுலாதேவி என்ற பெயரில் காட்டுவாசி பெண்ணாக பிறந்து புற்றிலிருந்த ஸ்ரீனிவாசனை தத்தெடுத்து வளர்த்தாள்.
அப்போது ஒரு நாள் தொண்டைமான் ஆகாச மன்னின் மகள் பத்மாவதி காட்டுக்கு வந்த போது ஸ்ரீனிவாசனை கண்டு காதல் கொள்கிறாள், இவளே ராமாயணத்தில் வேதவல்லியாக பிறந்து சீதைக்கு பதில் ராவணனால் துக்கி செல்லப்பட்டவள் என்று சொல்வார்கள், ராமன் சீதையை மீட்டு அக்னியில் இறங்க சொன்னபோது அதுவரை அக்னியில் மறைந்திருந்த சீதை வெளியே வர வேதவல்லி மறுபடியும் அக்னிக்கு உள்ளே என்று விட்டதாக சொல்வார்கள், ஆனால் முதலில் சீதையின் இடத்துக்கு வேதவல்லி எப்படி போனாள் என்று சொல்ல மாட்டார்கள், போகிறது அதை விட்டுவிடுவோம்
இப்படியாக வேடனுக்கும் அரசகுமாரிக்கும் காதல், என்ற மதுரை வீரன் கதையை திருடி ஸ்ரீநிவாசன் பத்மாவதி காதல் கதையை உருவாக்கினார்கள், பின் வாகுலாதேவி, தன் வளர்ப்பு மகனான ஸ்ரீநிவாசனுக்கு அரசன் மகளை பெண்கேட்டு சென்று அவனுக்கு பழைய சாபம் பற்றி நினைவூட்டி திருமணதிற்கு ஒப்புகொள்ள வைக்கிறாள்.
சாபம் பெற்ற சோழ மன்னன் பிரம்மராட்சதன் ஆனான், பிறகு அந்த பிரம்மரட்சதன் எப்படி இறந்தான், யார் அவனை கொன்றார்கள், என்று எதுவும் தெரியாது, அப்படி இறக்காமல் அடுத்த ஜென்மத்தில் பிறக்க முடியாதே, அப்படி பிரம்மரட்சதன் இறந்தவுடனே அவனுக்கு சாபம் முடிந்துவிட்டதே, பிறகு எதற்காக மறுபடியும் ஆகாச ராஜனாக பிறந்து பிறகு ஸ்ரீநிவாசனுக்கு பெண்ணை திருமணம் செய்து கீரிடம் சூட்டி சாபவிமோசனம் பெற வேண்டும் போன்ற கேள்வி கேட்போர், புராண இதிகாச சட்டதிட்டங்களின் படி தேச துரோகியாக அறிவிக்கப்படுவார்கள்.
இப்படியாக ஸ்ரீனிவாசனின் திருமணம் முடிவு செய்யப்படுகிறது, லட்சுமி தன்னுடன் இல்லை என்பதால் வறுமையில் வாடுகிறார் ஸ்ரீநிவாசன், முப்பத்து முக்கோடி தேவர்களும் வரவிருக்கும் திருமணம் என்பதால், வாகுலா தேவி தன் வளர்ப்பு மகன் திருமணதிற்கு குபேரனிடம் கடன் வாங்க சொல்கிறார்,
இதுவே இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்மணியால் மாபெரும் பொருட்செலவில் நடத்தப்பட்ட முதல் வளர்ப்பு மகன் திருமணம் என்றும் சொல்லலாம்.
திருமணம் முடிந்து ஸ்ரீநிவாசன் ஆகாச ராஜனை, தனக்கு ஒரு கோயில் காட்டி தர சொல்ல, திருப்பதி கோயில் கட்டப்படுகிறது.
ஆகாச ராஜன் இறந்த பிறகு அவன் மகன் வாசுதனனுக்கும், ஆகாச ராஜனின் தம்பி தொண்டைமானுக்கும் யார் வாரிசு என்று சண்டை ஏற்படுகிறது, தொண்டைமான் இரவில் கோயிலுக்கு சென்று ஸ்ரீனிவாசனை வேண்டி கேட்டுக்கொள்ள, அவனுக்கு தன் சங்கு சக்கரம், இரண்டையும் துணையாக அனுப்பி அவனை வெற்றி பெற வைக்கிறார். அதனால் தான் திருப்தியில் சாமியின் சிலையில் சங்கு சக்கரம் இல்லை, என்ன காரணத்தை சரியாக சொல்லிவிட்டர்களா.
இந்த புராணத்தில் சொல்லப்படும் காலம் கலியுக முடிவு என்று சொல்வதை கொண்டு ஹிந்துகளின் நாட்காட்டியான விக்கிரமாதித்தனின் சக வருட கணக்குப்படி பார்த்தால் கிபி. 57-58 வருடமாக இந்த காலத்தை கொள்ளலாம். இது வரலாற்று கணக்கு அல்ல புராணம் சொல்லும் வருடத்தின் குத்துமதிப்பான கணக்கு.
திருப்பதி பற்றிய மற்றொரு முக்கியமான புராணம் ராமானுஜர் பற்றியது, இதற்கு வெங்கடாசல இதிகாச மாலை என்று பெயர் ஏன் இது முக்கியம் என்றால் சுமார் பதினோராம் நூற்றாண்டில் யாதவ ராஜனின் முன்னிலையில் இந்த கோவிலை பற்றி நடந்த பஞ்சாயத்தே இந்த புராணம், இந்த அரசன் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள நாராயனவனம் என்ற பகுதியின் சோழர்களின் சிற்றரசன்.
இப்பவும் சிலர், திருப்பதி, ஒரு காளிகொவிலாமே, முருகன் கொவிலாமே, என்றெல்லாம் சந்தேகம் கிளப்புவார்கள், அது இன்று வந்த குழப்பங்கள் அல்ல ராமானுஜர் காலத்திலிருந்தே இருந்து வந்த குழப்பங்கள்.
இந்த பஞ்சாயத்தின் சாரம்.
யாதவ ராஜனின் சபையில், இந்த கோயில் தங்களுக்கு தான் சொந்தம் என்று நாலு பிரிவினர் வாதிட்டனர், சக்தி வழிபாடு செய்யும் சாக்த மத பிரிவினர், சிவனை வழிபாடு செய்யும் சைவ மத பிரிவினர், விஷ்ணுவை வழிபாடு செய்யும் வைணவ மத பிரிவினர், முருகனை வழிபாடு செய்யும் கௌமார மத பிரிவினர் ஆகியோரே இந்த நாலு குழுவினர்
சக்தி வழிபாடு செய்யும் சாக்த மத பிரிவினர்,
- தேவி பாகவதத்தில், இந்த மலையில் உள்ள தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வரி என்றுதான் கூறுகிறது,
- அதனால் தான் வெள்ளிகிழமைகளில் சாமியின் சிலைக்கு தாமள சேவா என்ற பெயரில் மஞ்சள் பூசப்படுகிறது,
- ஸ்த்ரி சுக்தம் என்ற பெண் சம்பந்தப்பட்ட மந்திரம் ஓதப்படுகிறது,
- இந்த கோயிலின், தெய்வம் பாலாஜி ஏறனு அழைக்கப்படுகிறது, பாலா என்ற வடமொழி சொல் பெண்குழந்தையை தான் குறிப்பிடுகிறது,
- கோயில் விமானத்தில்கூட விஷ்ணுவின் கருடனுக்கு பதில் காளியின் சிங்க உருவமே இருக்கிறது
அதனால் இது ஒரு சக்தி அல்லது காளி கோயிலே என்று வாதிட்டனர்.
சிவனை வழிபாடு செய்யும் சைவ மத பிரிவினர்,
- சங்கராச்சாரியாரின் ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் ஸ்ரீசைலம் மலையின் மல்லிகார்ஜுன சாமி பற்றி சொல்லப்படுகிறது
- திருப்பதி மலையின் பெயரே ஸ்ரீசைலம் தான்
- சிலையில் நாகபூஷணம் (பாம்பு ஆபரணங்கள்) உள்ளது, சிவனே நாகப்பாம்பை ஆபரணங்களாக அணிபவன்
- சிலையில் நெற்றியில் பிறை நிலா உள்ளது, சிவனே பிறை நிலவை ஆபரணமாக அணிபவன்
- இந்த கோவிலில் இன்றும் வில்வ இல்லை கொண்டு பூஜை செய்யப்படுகிறது, வில்வம் சிவனுக்குரியது
- இந்த சிலையில் ஜடாமுடியுடன் இருக்கிறது, ஜடாமுடி சிவனுக்குரியது
ஆகவே இந்த கோயில் ஒரு சிவன் கோயிலே என்று வாதிட்டனர்.
முருகனை வழிபாடு செய்யும் ஸ்கந்த மத பிரிவினர்
- மலை கோயில் என்றாலே அது முருகனின் கோயில் தான்.
- அங்கு இருக்கும் குளத்தின் பெயரே சாமி புஷ்கரணி
- சாமி என்ற சொல்லே குமாரசாமி, கந்தசாமி, சுப்ரமணிய சாமி என்று ஸ்கந்தனை குறிக்கும் சொல்தான்
- சுப்ரமணியன் தன் தந்தையின் கட்டளைபடி இந்த மலையில் உள்ள புஷ்கரணியில் குளித்து இங்கு தவம் செய்ய வந்தான் அதனால் தான் ஆயுதம் இல்லாமல் இருக்கிறான்
ஆகவே இந்த கோயில் ஒரு சுப்ரமணியன் கோயிலே என்று வாதிட்டனர்.
விஷ்ணுவை வழிபாடு செய்யும் வைணவ மத பிரிவினர், இந்த பிரிவினருக்கு ராமானுஜர் தான் தலைவர்.
- அங்கிருக்கும் குளத்தின் பெயரே சாமி புஷ்கரணி, சாமியின் தீர்த்தம், அதாவது, வைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம்,
- இந்த புஷ்கரணியில் இருக்கும் தெய்வம், லட்சுமி,
- தொண்டைமானுக்கு போரில் உதவ கொடுத்ததாலே, சிலையில் சங்கு சக்கரம் இல்லை
- பாகவதத்தில் கூட விஷ்ணு ஜடாமுடியுடன் தான் சித்தரிக்கபடுகிறார்.
- விஷ்ணுவின் படுக்கையே நாகம் தான் அதனால் நாகபூஷணம் அணிந்து இருப்பது விஷ்ணுவே
- லட்சுமிக்கு உகந்தது வில்வம் அதனாலே தான் வில்வத்தால் சாமிக்கும் பூஜை செய்யப்படுகிறது
என்று பல மறுப்புகளை சொல்லி வைணவர்கள் விஷ்ணு கோயிலே என்று வாதிட்டனர். (எல்லா காரணங்களும் வைணவர்ளின் மறுப்பில் இல்லையே என கேட்கக்கூடாது, வெங்கடாசல இதிகாச மாலையில் சொன்னது மட்டும் தான் இங்கே சொல்லி உள்ளேன்)
யாதவ ராஜன், ராமனுஜரின் வாதங்களை ஏற்று கொண்டு, அந்த கோயில் வைணவர்களுக்கே, சொந்தம் என்று தீர்ப்பு வழங்குகிறான். ராமானுஜர் அளவுக்கு மற்றவர்களால் வாதிட முடியவில்லை
இருப்பினும் ராமனுஜர், அரசனிடம், மூலவர் இருக்கும் அறையில், சிவனின் திரிசூலம், உடுக்கை மற்றும் விஷ்ணுவின் சங்கு, சக்கரம் ஆகிய இரண்டு வகை ஆயுதங்களையும் உள்ளே வைத்து கதவை பூட்டும் படி கேட்டுகொள்கிறார்.
மறுநாள் காலை கதவை திறந்து பார்த்தால்
மாயமில்லை மந்திரமில்லை........
கீழே வைத்துவிட்டு சென்ற சங்கு சக்கரம் இரண்டும் சிலையின் இல்லாத இரண்டு கைகள் தூக்கி வைத்திருப்பது போல இரண்டு பக்கத்திலும் இருந்தன.
ஒருவழியாக தன் மந்திர தந்திர வாத திறமையால், திருப்பதி விஷ்ணு கோயிலே என்று ராமனுஜர் நிறுவினார்,
பிற்கால வைணவ சந்ததிகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்குடாது என்று பின் வருவனவற்றை செய்தார்.
- கோவிலை வைணவ முறைபடி புது சுத்திகரிப்பு பூஜை யாகம் ஒன்றை செய்தார்.
- வைகாணசா ஆகமம் என்ற புது முறைப்படி கோயிலை பற்றி கட்டினார்
- சிலையின் கழுத்தில் ஒரு தங்க ஆரத்தில் பத்மாவதி மற்றும் ஊர்த்துவ புண்டர அடையாளம்(வேறு ஒன்றுமில்லை Y-வடிவத்தில் போடும் நாமம் தான்) உள்ள பதக்கங்களை மாட்டினார்
- வைகாணசா பிராமணன் பீம்பத்திர என்றவரின் வம்சமே கோயில் பூஜைகளை செய்ய வேண்டும் என்று அறிவித்தார்
- இரு பறக்கும் குதிரை சிலைகளை நிறுவினார், (தென்கலை ஐயங்காருக்கும் பறக்கும் குதிரைக்கும் எப்போதுமே ஒரு மெல்லிய இணைக்கும் நூல் இருக்கும் போலிருகிறது),
- அங்கிருந்த இரண்டு கிணறுகளை சுத்தம் செய்து தூர்வாரி அந்த கிணறுகள் பிராமணர் மட்டுமே கோயிலுக்காக தண்ணீர் எடுக்கலாம் என்று கட்டளை இட்டார். மற்றவர் தொடக்கூடாது.
- மலையின் பாதி வழியில் இருந்த குளத்திற்கு சண்டாள தீர்த்தம் என்று பெயரிட்டு சுத்திரர்கள் சண்டாளர்கள் இங்கு இருக்கும் தண்ணீரை மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டார்
- சண்டாள தீர்த்ததின் கரையில் கல்லில் ராமர் பாதம் செதுக்கும் படி செய்தார்
- மலைஅடிவாரத்தில் கோவிந்தராஜ பெருமாள் கோவிலை கட்டினார்
- கோவிலுக்கு உள்ளேயே நரசிம்மருக்கு தனி சந்நிதி அமைத்தார்
- மூலவருக்கு தங்கத்தில் நாகபூஷனங்கள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
- ஒரு தலைமை பூசாரியை நியமனம் செய்து அவருக்கு உதவியாக ஆனந்தராயரின் (ராமானுஜரின் தலைமை சீடர்) சீடர்கள் 3 பேரை நியமனம் செய்தார்
பின் ஸ்ரீரெங்கம் திரும்பினார்.
மேலே கூறிய வேலைகளை திருப்பதியில் ராமானுஜர் செய்து கொண்டு இருக்கும் போது தான், முதலாம் குலோத்துங்க சோழனால் சிதம்பரத்திலே, கோவின்தராஜாபெருமாள் சிலை அப்புறப் படுத்தப்படும் சிறப்பான நிகழ்வு நடந்தேறியது (தசாவதாரம் திரைப்படத்தில் வந்த காட்சி)
இதில் சொல்லப்பட்டிருக்கும் யாதவ ராஜன், விக்ரமசோழன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வேங்கடம் சார்ந்த பகுதிகளை சோழர்கள் சார்பாக ஆண்டு வந்த சிற்றரசன் சைவ சமயத்தை சார்ந்த இவனது உண்மையான பெயர் கட்டதேவன் என்பது ஆகும். தான் செய்திருக்கும் இந்த திருப்பதி சார்ந்த வேலைகள் பேரரசுக்கு உவப்பு அளிக்காது என்று அஞ்சி இதை பற்றி எந்த கல்வெட்டுகளிலும் அவன் குறிப்பிடாது விட்டிருக்கலாம்.
ஆயினும், திருப்பதியில் உள்ள முக்கிய பூந்தோட்டத்திற்கு இன்றும் ஆனந்த ஆழ்வார் தோட்டம் என்றே பெயர். ஆனந்த ஆழ்வார் என்பது ராமனுஜரின் மற்றொரு சிறப்பு பெயர். திருப்பதியில் ஸ்ரீரெங்கம் கோயிலில் நடப்பது போல் குதிரைமேல் கோவிந்தராஜன் ஊர்வலம், திவ்ய பிரபந்த பாராயணம், திருப்பாவை உத்சவம், அத்தியாயன உத்சவம் போன்றவை நடைபெற வேண்டும் என்பது யாதவ ராஜன் என்ற கட்டதேவனின் பிற கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது சிறிது வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம், இந்த கட்டுரையில் முதலில் சொன்ன புராண கதையை வரலாறாக கொள்ள முடியாது, அந்த கதை வேறு எங்கும் இல்லை (science is proved through repetition) மகாபாரதம், ராமாயணம் விஷ்ணு புராணம் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம், கடைசி காலத்தில் எழுதப்பட்ட பாகவதத்தில் கூட வெங்கட மலை ஸ்ரீநிவாசன் பற்றி எந்த குறிப்பும் இல்லை. அதனால் முதல் புராணம் ஒரு கருடா புராணம் அல்ல புருடா புராணம்.
டாக்டர்.கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய வைணவ கோயில்கள் என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள பல்லவர்கால சாருதேவி, குர்ரம், தந்தான்தொட்டம் செப்பேடுகளை மேற்கோள் காட்டும் போது, கிபி 400-700 காலகட்டத்தில்:
- விஷ்ணுகோப பல்லவன்.
- சிம்ஹவிஷ்ணு பல்லவன்
- சிம்ஹவர்ம பல்லவன்
- ஸ்கந்தவர்ம பல்லவன்
- மகேந்திர பல்லவன் (விசித்திர சித்தன்)
- நரசிம்ஹ பல்லவன் (வாதாபி கொண்டான்)
- இரண்டாம் நந்திவர்ம பல்லவன் (காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் கட்டியவன்)
- கோ விஜய விக்கிரவர்மன் (இராமாயண, மகாபாரத கதைகளை கோயில்களில் உபன்யாசம் கட்டாயமாகியவன்)
- முதலாம் பரமேஸ்வரவர்மன்
- தண்டிவர்மன்
பல வைணவ கோயில்களுக்கு பல்லவர்கள் அளித்த நன்கொடைகள் பற்றி சொல்லும் போது மேலே சொன்ன இந்த செப்பேடுகள் எதிலும் திருப்பதி என்ற கோயிலை பற்றி ஒரு வார்த்தை குறிப்பு கூட இல்லை என்பதை தெளிவாக சொல்கிறார் நான் சொல்லவில்லை அய்யங்கார் சொல்கிறார்.
ஆனால் திடீரென்று ராமானுஜர் காலத்தில் இத்தனை குழப்பம், இறுதியாக பார்பனர் கோயிலை கைப்பற்றுதல் நடக்கிறது.
அதாவது களப்பிரர் காலமான கிபி 200-550-க்கு பின் வந்த பல்லவர் காலமான கிபி 550-800 காலகட்டத்தில் கூட திருப்பதி என்ற கோயில் எங்குமே குறிப்பிடப்படவில்லை
ராமானுஜர் காலத்தில் 1100-களில் எப்படியோ சில ஏமாற்று வேலைகளின் மூலம் திருப்பதி கோயில் பார்பனர் வசம் ஆனது.
இறுதியாக பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு அரசனின் உண்மையானா காதலினால் அந்த கோயில் சைவ சமயத்தினருக்கு கிடைத்திருக்ககூடிய வாய்ப்பினை பற்றி கிருஷ்ணதேவராயனின் வரலாற்றில் ஏற்கனவே பார்த்தோம்
மேலும் என்னென்ன குழப்பங்கள் என்று...............
இரண்டாம் பகுதியான இலக்கிய சான்றுகள் குறித்து சுவையான செய்திகளை அடுத்த பகுதியில் பார்போம்.
No comments:
Post a Comment